Sunday, October 4, 2009

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 05)

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி on Monday, June 1st, 2009

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.

உள்ளதை வைத்து விமர்சனம் செய்வதுதான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.

எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். (பக்:1298)

நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் மனைவியருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குப் போலி உணர்வு ஏற்பட்டது! 6 மாதம் அல்ல, 6 வருடம் இந்த நிலை ஏற்பட்டால் கூட இதை எதிரிகள் விமர்சனம் செய்யமாட்டார்கள். விமர்சனம் செய்யவும் முடியாது! ஏனெனில், இது வெளி உலகுக்குத் தெரியும் சமாச்சாரமல்ல.

அவர்களுடனும், அவர்களது மனைவியருடனும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை இது! இதனை எப்படி எதிரிகள் விமர்சனம் செய்ய முடியும்? எனவே, சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள், விமர்சனம் செய்யாததினால் சூனியம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல் என அவர் வாதிடுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்று சிந்தித்துப் பாருங்கள்!

காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்களே! என்ற அர்த்தமற்ற-நியாயமற்ற-நபி(ஸல்) அவர்களுடைய சமூக வாழ்வில் சம்பந்தப்படாத சங்கதியை வைத்து, யூகம் செய்து, அந்த யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பது எவ்வளவு தவறான அணுகுமுறை என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்!

அவர்களுக்கு இது குறித்த எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக வெறும் யூகம் உண்மைக்கு எந்தப் பயனும் தராது. (53:28)

‘அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது.’ (53:23)

வெறும் யூகங்களைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சத்தியத்திற்கு துணை நிற்காது எனும் போது, யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கும் இவரின் வாதத்தின் உண்மை நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்.

மிகைப்படுத்தலும், இட்டுக்கட்டலும்:

‘முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், செய்ததைச் செய்யவில்லை என்கிறார், செய்யாததைச் செய்தேன் என்கிறார், இவர் கூறுவதை எப்படி நம்புவது?’ என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள். (பக்:1298)

ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும்-செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி(ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன்வைக்கலாமா?

இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். (பக்:1298)

இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக எண்ணியது எதிரிகளுக்கு அல்ல, நபித் தோழர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனும் போது, எதிரிகளுக்குத் தெரிந்திருக்கும், அவர்கள் நிச்சயமாக விமர்சித்திருப்பார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும். இந்தப் பந்தியிலும் இந்தப் பாதிப்பு நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை என்ற யூகத்தையே அவர் முன்வைத்துள்ளார்.

5 வேளை அல்ல, 50 வேளை மக்களுக்குத் தொழுகையை நடத்தினாலும் அவருக்கு ஏற்பட்டதாக ஹதீஸ் கூறும் பாதிப்பு வெளி உலகுக்குத் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை எனும் போது, இவ்வாதம் அர்த்தமற்றுப் போகின்றது. இந்தப் பந்தியிலும் அவர் யூகத்தைத்தான் முன்வைக்கின்றார்.

6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில்தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப்பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.

எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

பல யூகங்களை முன்வைத்து, சில மேலதிக கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு இறுதி முடிவை மட்டும் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகின்றார். பலவீனமான அறிவிப்பாளர்கள் பலர் ஒரு செய்தியைச் சொன்னாலும், அது பலவீனமானதுதான் எனக் கூறும் இவர், பல யூகங்கள் சேர்ந்து ‘திட்டவட்டமான உண்மை’ என்ற நிலையை அடையாது என்பதை அறியாதிருப்பது ஆச்சரியமாகவுள்ளது!

நல்லறிஞர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை:

எதிரிகள் விமர்சனம் செய்யாததற்கு நாம் விளக்கம் கூறி விட்டோம். இது நபி(ஸல்) அவர்களது குடும்ப விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே எதிரிகளுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே விமர்சித்திருக்க முடியாது என்பதே அந்த நியாயமான பதிலாகும்.

இப்போது நியாயமான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களின் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இடம்பெற்ற நூற்களுக்கு விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

இந்த ஹதீஸ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் அறிந்த மஸ்ஹூர்-பிரபலமான அறிவிப்பாகவும் திகழ்கின்றது.

நம்பத் தகுந்த நல்லறிஞர்கள் யாரும் ஏன் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை? அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா?

அவர்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கருதவில்லை, பகுத்தறிவுக்கு முரண்பட்டதாகக் கருதவில்லை.

சூனியம் பற்றிய குர்ஆனின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை, இந்த ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனில் சந்தேகம் ஏற்படும் என்று கருதவில்லை.

இப்படி இருக்க, இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அத்தனை பேரையும் அறிவிலிகள் என்பதா? குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர்கள் என்பதா? அல்லது இவர், தான் புரிந்துகொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா? இதை ஒவ்வொரு கொள்கைச் சகோதரனும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா?

அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா? எது வலுவான நியாயமான வாதம்? என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கும் போது இவர் தவறான கோணத்தில் அணுகி பிழையான அடிப்படையில் விமர்சித்து, அர்த்தமற்ற வாதங்களை முன்வைத்து, அந்த ஹதீஸை மறுக்க முயல்வதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வாதத்திற்கு வலு சேர்க்க அவர் இன்னும் பல யூகங்களைத் துணை வாதங்களாக முன்வைக்கின்றார். அவற்றிற்கான விளக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

இறைத் தூதர்களுக்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள்தான் என்பதை நிரூபிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டன என்பதை நிரூபிக்கவும், சாதாரண மனிதர்களை நபியாக ஏற்க மக்கள் மறுத்தனர் என்பதை விளக்கவும் அவர் பல குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். 17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்….

இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)

நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் அவர் முடக்கிப் போடப்பட்டதாக ஹதீஸ் கூறவில்லை. இது தேவையில்லாத மிகைப்படுத்தலாகும். தொடர்ந்து வரும் பந்திகளிலும் சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டதாகவும், வீழ்த்தப்பட்டதாகவும் சித்தரிக்கின்றார். இது ஹதீஸில் கூறப்படாததைக் கூறி, மிகைப்படுத்தி, அதன் பின் அந்த ஹதீஸை மறுக்கும் தவறான அணுகுமுறையாகும். இப்படி மிகைப்படுத்தினால்தான் மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வரலாம் என்பதற்காக, அவர் மறுக்கும் எல்லா ஹதீஸ்களிலும் இந்த மிகைப்படுத்தும் தவறான போக்கைக் கைக்கொள்கின்றார்.

இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?

‘நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம், இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே, இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள்’ என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் மட்டும் தெரிந்த செய்தி என்று ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம். அத்துடன் சூனியம் செய்யப்பட்ட செய்தி அறியப்பட்ட பின்னர் கூட இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி தீமை உருவாகி விடக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில்தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித்தான் ஹதீஸ் கூறுகின்றது.

இப்படி இருக்க, நபி(ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து நபியையே முடக்கிப் போட்டார்கள். எனவே, நபியை விட யூதர்களே ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் எனச் சிலர் எண்ணியிருப்பார்கள், இதை விமர்சித்திருப்பார்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது எப்படி நியாயமாகும்?

அடுத்து, சூனியம் செய்த யூதர்களை ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணியிருப்பார்களாம்.

சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத்தான் மக்கள் கருதினர்.

இவர் குறிப்பிட்டுள்ள வசனங்களில்,

அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. ‘இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?’ என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)

என்பதும் ஒன்றாகும்.

சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத்தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.

‘இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்’ என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.

‘எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள்’ என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இந்தப் பந்தியிலும் சூனியத்தின் மூலம் நபியவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஒருவரும் விமர்சிக்கவில்லை, இஸ்லாத்தை விட்டும் வெளியேறவில்லை. எனவே, சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் பொய்யானது என்கிறார்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால், இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நினைத்தார்கள். இது அவர்களது மனைவிமாரைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. எனவே எவரும் விமர்சிக்கும் நிலையோ, இதைக் காரணம் காட்டி இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலையோ ஏற்பட வாய்ப்பு இல்லை.

அடுத்து, தனக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது நபிக்கே இறுதியில்தான் தெரிய வந்தது. அப்படியிருக்க யூதர்கள் இவரை வீழ்த்தி விட்டனர் என மக்கள் விமர்சித்திருப்பார்கள், இவர் செய்த அற்புதத்தால் இவரை நம்பினால் யூதர்கள் இவரை விட பெரிய அற்புதத்தைச் செய்து விட்டார்களே என முஸ்லிம்கள் எண்ணி இருப்பர் என்ற வாதங்களும், யூகங்களும் அர்த்தமற்றவைகளாகும்.

இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.

எல்லா விடயத்திலும் யூகம் செய்தவர், தற்போது அல்லாஹ்வின் விஷயத்திலும் யூகம் செய்கிறார். அதுவும் பிழையான யூகம்!

முதலில் சூனியத்தை ஆன்மீகம்-அற்புதம் என்கிறார். சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டார்கள்-வீழ்த்தப்பட்டார்கள் என்று சித்தரிக்கின்றார். பின்னர், இறைத் தூதருக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்ற யூகத்தை முன்வைக்கின்றார். முடிவை மட்டும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகக் கூறி விடுகின்றார். தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க அவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘இஸ்ரா மிஹ்ராஜ்’ என்ற அற்புதமே பலரைத் தடம்புரளச் செய்துள்ளது. இது குறித்து அவரே பேசியுமுள்ளார். அப்படி இருக்கும் போது இப்படி வாதம் செய்வது நியாயமா?

‘தஜ்ஜால்’ எனும் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிக்கு அல்லாஹ் பல அற்புதங்களை வழங்குவான். அவன் வானத்தைப் பார்த்து, ‘மழை பொழி’ என்றால் மழை பொழியும், அவனை ஏற்ற மக்களின் ஊர்கள் செழிப்படையும், ஏற்காதோரின் ஊர்கள் வரண்டு செழிப்பற்றுப் போகும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாத்தின் எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை(?) வழங்க மாட்டான் என்று எப்படிக் கூறமுடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே! எனினும், அவர் மறுக்க முடியாத அல்லாஹ்வின் விடயத்தில் அவர் செய்த யூகம் தவறானது என்பதை நிரூபிக்கத்தக்க சான்று ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.

மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கின்றார்கள். ஹாரூன்(அலை) அவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். சாமிரி என்பவன் ஜிப்ரீல்(அலை) அவர்களின் காலடி மண்ணையும், நகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காளைக் கன்றைச் செய்கிறான். அது மாடு கத்துவதைப் போன்று கத்துகின்றது.

அவன் அவர்களுக்குக் காளைக் கன்றின் உருவத்தை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. உடனே, (மக்கள்) ‘இதுதான் உங்கள் இரட்சகனும், மூஸாவின் இரட்சகனும் ஆகும். ஆனால், அவர் மறந்து விட்டார்’ என அவர்கள் கூறினர்.’ (20:88)

(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) ‘இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள்’ என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. ‘பகாலூ’-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை ‘கால’-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)

அப்பொழுது மக்கள் காளைக் கன்றை வணங்குகின்றனர். ஹாரூன் நபி, ‘இதை வணங்காதீர்கள்’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கின்றார். மக்கள் அவரைக் கொலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலையிலும் ஹாரூன் நபியால் இதற்கு மாற்றமாக அல்லது இதை மிகைக்கும் வண்ணம் அற்புதம் செய்து அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து-’கராமத் முஃஜிஸா’ பற்றிப் பேசும் போது இவரே விரிவாகவே பேசியுள்ளார்.

இங்கே எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கியுள்ளான். நபிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் தடம்புரண்டு, நபியையே எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இப்படி இருக்க, இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கை கொண்ட மக்களை, அல்லாஹ் நிச்சயமாகத் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்ற இவரின் யூகம் குர்ஆனுக்கு முரண்பட்டது. அல்லாஹ்வின் விடயத்தில் குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகம் செய்யும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்?

இந்தத் தவறான யூகத்தினதும், வாதத்தினதும் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை மறுக்கும் அவரது வாதம் தவறானது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.

அடுத்து, சூனியம் வைக்கப்பட்டவர் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது என்ற அடிப்படையில் அவர் வைக்கும் வாதத்தில் அவர் குர்ஆனுக்கும், அவரது சொந்த வாதங்களுக்கும் முரண்படும் விதத்தைத் தொடர்ந்து நோக்குவோம்.

-இன்ஷா அல்லாஹ்-

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 04)

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி on Monday, May 11th, 2009

பாதுகாக்கப்பட்ட இறைவேதம்:

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது, அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது, தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது’ என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

திருமறைக் குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும். தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ - இறைவேதம் - சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் ‘இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.

எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் ‘இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.

பிஜே தர்ஜமா: பக்கம்-1296

சுட்டிக்காட்டப்பட்ட இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் அடிப்படையான தவறுகளை ஒவ்வொன்றாக

இனங்காணுவோம்:

தவறு-01:
நபி (ஸல்) அவர்களுக்கு
சூனியம் செய்ததனால் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக போலித் தோற்றம் அவருக்கு ஏற்பட்டது. அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார். இதை மனநிலை பாதிப்பு என்று கூறமுடியாது. இந்தப் பதத்தின் மூலம் சூனியத்தால் நபி(ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார். அவரது அமைப்பின் அழைப்பாளர்கள் தமது உரைகள், உரையாடல்கள் மூலம் சூனியம் செய்யப்பட்டதால் நபி(ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகக் கூறியுள்ளனர். இது நபி(ஸல்) அவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டும் இவர்களது இழிசெயலின் ஒரு பகுதி எனலாம்.

தவறு-02:
தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது என்று முதல் பந்தியில் கூறி விட்டு அடுத்த பந்தியிலேயே ‘தமக்கு
சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் .. ஹதீஸின் கருத்தை மிகைப்படுத்தி, திரிபுபடுத்தியுள்ளார்.

தான் செய்யாததைச் செய்ததாகப் போலித் தோற்றம் (மாயை) நபியவர்களுக்கு ஏற்பட்டது என்றுதான் ஹதீஸ் கூறுகின்றது. தான் செய்யாததைச் செய்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறவே இல்லை. அப்படியிருக்க முதல் பந்தியில் கருதினார்கள் என்றும் இரண்டாம் பந்தியில் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்றும் ஏன் நபி (ஸல்) மீது இட்டுக்கட்ட வேண்டும். ஹதீஸில் கூறப்படாத ஒரு கருத்தை ஏன் பொது மக்கள் மனதில் பதிக்க வேண்டும்?

தனது தர்ஜமாவில் 1298ம் பக்கத்தில் இக்கருத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அழுத்தம் கொடுத்து பின்வருமாறு கூறுவது வேதனையானது. ‘முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். செய்ததைச் செய்யவில்லை என்கின்றார். செய்யாததைச் செய்தேன் என்கின்றார்…’ பக் (1298) நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் இப்படியான பாதிப்பு எல்லாம் ஏற்பட்டன என்று ஹதீஸில் இடம்பெறாத கருத்துக்களை ஹதீஸின் கருத்தாகப் புனைந்து, அவற்றைப் பெரிதுபடுத்தி, நபியவர்களது அந்த சூழ்நிலை பற்றித் தப்பெண்ணத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார். நியாயமாக விமர்சிப்பதாக இருந்தால் ஹதீஸில் கூறப்பட்டது குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்பதையல்லவா எடுத்துக்காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு ஹதீஸில் சொல்லப்படாத கருத்தைத் திணித்து நிரூபிக்க முனைவது எந்த வகையில் நியாயமானது என்பதைப் பொதுமக்கள் நடுநிலை நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

இனி பி.ஜே அவர்களது நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது சம்பந்தமான ஹதீஸ்களை மறுப்பதற்காக முன்வைக்கும் வாதங்களை அலசுவோம்.

‘தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம்(ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் -இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்-’ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும்’ என்று எழுதியுள்ளார்.

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற பொதுத் தலைப்பில் ‘நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் …’ என்ற சிறு தலைப்பில் அவர் எழுதியதை அப்படியே கீழே தருகிறோம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (திருக்குர்ஆன் 75:16, 20:14)

‘திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம். அதை உமது உள்ளத்தில் ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு’ என்று திருக்குர்ஆன் கூறியது.

இன்னொரு வசனத்தில் ‘உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர்’ (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.

எனவே ஜிப்ரீல் என்ற வானவர் நபிகள் நாயகத்திற்கு அதிகமான வசனங்களைக் கூறினாலும் கூறிய உடனே ஒலி நாடாவில் பதிவது போல் அவர்களின் இதயத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.

தனது தூதராக இறைவன் அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.

திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.

ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஓத-ஓத ஒலிநாடாவில் பதிவது போல் நபியவர்களது உள்ளத்தில் அது பதியும்ள, அதை அவர் மறக்க மாட்டார். அவரது உள்ளத்தில் பதியும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்றெல்லாம் எழுதி விட்டுத் தன் மனைவியிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்ள, வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றதல்லவா?

‘வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ள படி கூறினார்கள்ள, மற்ற விஷயங்களில்தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும்’ என்று தனது தர்ஜமாவில் (பக் 1298) குறிப்பிடுகின்றார்.

வஹீயைப் பாதுகாப்பதற்காக அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். திருக்குர்ஆனில் எந்தத் தவறும் வராது (பார்க்க பிஜே குறிப்பு 351)

(நபியே! குர்ஆன் இறக்கப்படும் போது) அதற்காக நீர் அவசரப்பட்டு உமது நாவை அசைக்க வேண்டாம். நிச்சயமாக அதனை ஒன்றுசேர்ப்பதும் அதனை ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும். (75:16-17)

(நபியே!) நாம் உமக்கு (குர் ஆனை) ஓதிக்காட்டுவோம். அல்லாஹ் நாடியதைத் தவிர நீர் மறக்கமாட்டீர். (87:6)

நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கியுள்ளோம். இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்பவர்களாவோம். (15:09)

(குறிப்பு: இந்த வசனத்திற்கு பிஜெ விளக்கக் குறிப்பு எழுதும்போது 143ம் குறிப்பில் குர்ஆன் எழுத்துப் பிசகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். தொகுக்கப்பட்ட வரலாற்றில் எழுத்துப் பிழை ஏற்பட்டதாக எழுதுகிறார்)

என்றெல்லாம் குர்ஆன் கூறுவதால் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயுடன் சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறுவது எப்படி பிஜேயை நகைக்க வைத்தது என்பது புரியாத புதிராக இருக்கின்றது!

நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால் வஹீயிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹி வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற நகைப்புக்கிடமான வாதத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் கூட ஹதீஸை நம்புபவர்களுக்குக் குர்ஆனில் சந்தேகம் கொள்ள இடம் இல்லை.

ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அது வரை அருளப்பட்ட குர்ஆனை ஓதவைத்து சரி பார்ப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இரு முறை மீட்டிப் பார்த்தார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.

(குறிப்பு: இந்த ஹதீஸில் கூட பிஜே தவறு விட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 36) என்று ஹதீஸுக்கு மாற்றமாக ‘அந்த வருடத்தில்’ என்பதை இடைச் செருகல் செய்துள்ளார்.)

அவரது வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் கூட நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருந்தால் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து மீட்டிப் பார்க்கும் போது, ‘இன்னின்ன வசனங்கள் நான் கொண்டு வராமல் நீங்களாகவே சேர்த்துள்ளீர்கள்’ என்று கூறி வஹீயைப் பாதுகாத்திருக்க மாட்டார்களா? அல்லது வஹியில் நபிக்கு தவறு எற்பட்டிருந்தால் அல்லாஹ் சுட்டிக் காட்டியிருக்கமாட்டானா?

குர்ஆன் இறைவேதம்தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்துகொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகின்றார்கள். (பக் 1298)

மார்க்கத்தைக் காஃபிர்கள் இப்படிக் கேட்பார்கள் என்ற மனநிலையிலிருந்து ஆய்வு செய்வதுதான் அவரது அண்மைக்கால புதிய நிலைப்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும். எதைக் கூறினாலும் அது காஃபிர்களைத் திருப்திப்படுத்துமா? என்றுதான் சிந்திக்கின்றார்.

குர்ஆனில் தவறு இல்லை. அது நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் பதியப்பட்டது என்ற பீ.ஜேயின் கருத்தைக் கூட காஃபிர்கள் ஏற்கும் வண்ணம் நிரூபிக்க முடியாதுதானே? இந்த இடத்தில் காபிர்கள் திருப்தியடையாத சில விடயங்கள் பற்றிய கேள்விகளை நாம் கேட்க விரும்புகின்றோம்.

நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. 4 றக்அத்துடைய தொழுகையை இரண்டு றக்அத்திலேயே முடித்து விடுகின்றார்கள். துல்யதைன் என்பவர் நினைவூட்டிய பின்னர் கூட அது அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை. துல்யதைன் கூறியதை ஏனைய நபித் தோழர்கள் உறுதிப்படுத்திய பின்னர்தான் அது அவர்களுக்கு நினைவில் வந்தது என ஹதீஸ் கூறுகின்றது.
(முஅத்தாஇ புகாரிஇ முஸ்லிம்இ அபூதாவூத்இ திர்மிதி)

நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படும் என்பதையும், (18:24) ஏனைய நபிமார்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது (20:115, 18:73) என்பதையும் அல்குர்ஆன் உறுதி செய்கின்றது.

இதை வைத்து சாதாரண ஒரு மனிதர் உங்கள் நபிக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. அவர் அல்லாஹ் அருளிய பல வசனங்களை மறதியாக விட்டிருக்கலாம். தொழுகையில் ஏற்பட்ட மறதியை துல்யதைன் நினைவூட்டினார். ஆனால்இ வஹீயில் ஏற்பட்ட மறதியை மனிதர்கள் நினைவூட்ட முடியாதல்லவா? எனவேஇ இறக்கப்பட்ட பல வசனங்களை மறதியாக அவர் விட்டிருக்க வாய்ப்புள்ளதல்லவா? என்று கேட்டால் என்ன கூறுவது? இவ்வாறே தமது மனைவிமார்களின் திருப்திக்காக தேனை ஹராம் என நபி(ஸல்) அவர்கள் கூறியதைப் பின்வரும் வசனம் கண்டிக்கின்றது.

‘நபியே! உமது மனைவியர்களின் திருப்தியை நாடிஇ அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் தடைசெய்து கொள்கிறீர்? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ள, நிகரற்ற அன்புடையவன்.’ (66:01)

இதை வைத்து ஒரு காஃபிர் உங்கள் நபி மனைவிமாரைத் திருப்திப்படுத்துவதற்காக ஹலாலை ஹராம் என்று கூறியுள்ளார். மனைவியைக் கணவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் பல வழிகள் உள்ளன. மனைவியிடமே இப்படி நடந்துகொண்டவர் மக்களைத் திருப்பதிப்படுத்த எத்தனை ஹராம்களை ஹலாலாக்கினாரோ? எனவேஇ அவர் கூறிய குர்ஆன்-ஹதீஸ் இரண்டுமே சந்தேகத்திற்குரியவை என்று கூறினால் என்ன கூறுவது? அந்த வசனத்தைப் பொய்யானது என்பதா? அல்லது இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதா?

எனவே, காஃபிர்கள் திருப்திப்படுவார்களா? என்பதை வைத்து நாம் குர்ஆன்-ஹதீஸை ஆராய முடியாது! சகோதரர் பிஜே அவர்களும் காஃபிர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இஸ்லாத்தின் கருத்துக்களை திசைதிருப்பவோ அதன் கருத்துக்களுக்கு வலிந்து பொருளுரை செய்யவோ முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றோம்.

‘நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத்தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? அல்லவா? என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.’ (பக் 1298) என்று தனது வாதத்திற்கு வலு சேர்க்க வரலாற்றையே மாற்றி எழுதுகின்றார்.

நபித் தோழர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்தனர். காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களது நடைமுறையை வைத்து, சொல்லும் செய்தியை எடை போடும் நிலை ஸஹாபாக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தாலும் அது சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக அமையாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வளவுதான்! இது வெளி உலகத்திற்குத் தெரியக் கூடிய சமாச்சாரம் அல்ல என்பது தெளிவு. அப்படியிருக்க அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட இந்த நிலை வஹீயில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிட வரலாற்றையே புரட்ட வேண்டிய தேவை என்னவோ? ‘செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத்தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்’ எனக் கூறித் தனது வாதத்தை முடிக்கின்றார். நபி(ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறவில்லை என்பதை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.

குர்ஆனைப் பாதுகாக்கின்ற பொறுப்பை அல்லாஹ் எடுத்துக்கொண்டதாலும், ‘நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்ள, நீர் அதனை மறக்கமாட்டீர்’ என அல்லாஹ் கூறுவதாலும், நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வஹீயை இறக்கும் போது அது பதிவு செய்யப்பட்டு விடும் என்பதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயைத் தாக்காது என்பதை ஏற்றுக்கொள்வது கடுகளவு ஈமான் உள்ளவர்களுக்கும் கஷ்டமான விஷயம் அல்ல. எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக சூனியத்தின் மூலம் ஏற்பட்ட போலி உணர்வு(பிரக்ஞை)க்கும் வஹீக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் பிஜேயின் இந்தப் பிழையான வாதம் வலுவற்றுப் போய் விடுகின்றது.

திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத்தான் ஆகவேண்டும். (பக் 1296) என்று கூறியே இவர் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது தொடர்பான ஹதீஸ்களை மறுக்கும் தனது நிலையை நியாயப்படுத்தி வருகின்றார். குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவர் செய்திருக்கும் சில விபரீதங்களை இங்கே தொட்டுக் காட்ட விரும்புகின்றோம்.

அல்குர்ஆனின் எழுத்துப் பற்றிப் பேசும் போது ‘எழுதுகின்ற எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்’ (பக் 58) என்று குறிப்பிட்டு குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

59 ஆம் பக்கத்தில் பிழையாக எழுதப்பட்ட இடங்கள் என்ற ஒரு பட்டியல் போட்டுள்ளார். இதனைத் தனியாக ஒரு இணையத் தளத்தில் சிலர் வெளியிட்டு குர்ஆனில் பிழைகள் உள்ளதாக இஸ்லாமிய மூதறிஞர் கூறுகின்றார் என தகவல் போடும் நிலை ஏற்பட்டுள்ளது..

‘தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத்தான் மனனம் செய்தார்கள்.’ (பக் 60) என்று எழுதிக் குர்ஆனில் வசனங்கள் தவறாக எழுதப்பட்டுள்ளன எனக் கூறிக் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வசனங்களின் எண்கள் என்ற தலைப்பில் வசனங்களுக்குத் தவறாக எண்களை இட்டவர்கள் குறித்து கூறும் போதுஇ ‘மற்றவர்கள் குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகிவிட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை’ (பக் 55) என எழுதுகிறார்.

7 வசனங்களையுடைய அத்தியாயம் எனக் குர்ஆன் கூறும் (15:87)) சூறதுல் பாத்திஹாவை 6 வசனங்களையுடையதாகக் கூறிக் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அல்குர்ஆனின் அத்தியாயங்கள் பற்றி கூறும் போது சில அத்தியாயங்கள் 286 வசனங்கள் கொண்டதாகவும், சில அத்தியாயங்கள் மூன்றே மூன்று வசனங்களைக் கொண்டதாகவும் அமைந்திருப் பதாகக் கூறி விட்டு (பக் 46) 113 ஆவது அத்தியாயம் அல்ஃபலக்கையும், 109 ஆவது அத்தியாயம் அல்காஃபிரூனையும் ஒரு வசனங்களையுடைய சூறாக்களாகச் சித்தரித்து அல்குர்ஆனில் விளையாடியுள்ளார்.

இறுதியாகஇ இவரது இந்நிலையில் இவர் நியாயத்துடன் நடந்துகொள்ளவில்லை என்பதற்கு மறுக்க முடியாத ஒரு சான்றை முன்வைக்க விரும்புகின்றோம்.

மலக்குகள் ஆசா-பாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்ள, அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து நடப்பதே அவர்களது பணி. அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். இது ஸலபுஸ்ஸாலிஹீன்களான அஹ்லுஸ்ஸுன்னா ஜமாஅத்தினரினதும் உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பிஜே பின்வருமாறு எழுதியுள்ளார்.

மனிதனைப் படைப்பது பற்றி அல்லாஹ் கூறிய போது, ‘பூமியில் குழப்பம் விளைத்து இரத்தம் சிந்துபவர்களையா நீ படைக்கப் போகின்றாய்?’ என மலக்குகள் கேட்டதாகக் குர்ஆன் கூறுகின்றது. (2:30)

இது பற்றிப் பிஜே எழுதும் போது, ‘முன்பு ஆட்சேபனை செய்த போது அவர்களுடன் ஷைத்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்’ என்று எழுதியுள்ளார். (பார்க்க: தர்ஜமா-பக்கம்:1337, விளக்கக்குறிப்பு:395,
‘இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்’-பக்கம்:59)

இந்தக் கூற்று குர்ஆனுக்கு முரண்பட்டதாகும்இ அத்தோடு ஈமானுக்கும் வேட்டு வைக்கும் உளரலாகும். இந்த உளரலின் அடிப்படையில் நோக்கும்போது மலக்குகள் ஷைத்தானின் சூழ்ச்சிக்குள்ளாகலாம்ள, அவனது தூண்டுதலால் அல்லாஹ்வுக்கே ஆட்சேபனை செய்வார்கள் என்றால் ஷைத்தானுக்கு வழிப்படும் இயல்பும், அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் இயல்புமுள்ள மலக்குகள் கொண்டு வந்த ஒட்டுமொத்த குர்ஆனிலும் சந்தேகம் வந்து விடுமே! இந்த வசனம் ஷைத்தானின் தூண்டுதலால் கொண்டு வரப்பட்டதாக இருக்குமோ? என்று ஒவ்வொரு வசனத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தி விடுமல்லவா? பிஜேயின் இந்தத் தவறு பல விதத்திலும் அவருக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் தனது தவறான அந்த வாதத்தை அவர் கைவிடாது ‘சூனியம்’ என்ற புதிய புத்தகத்திலும் அக்கருத்தைக் கூறியுள்ளார் என்றால், குர்ஆனைப் பாதுகாக்கவே அதற்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கின்றோம் என்ற அவரது வாதத்தை எப்படி நம்பமுடியும்?

‘ஹதீஸ் குர்ஆனில் சந்தேகத்தை உண்டுபண்ணினால் அதைத் தூக்கி வீசவேண்டும் எனக் கூறும் இவர், குர்ஆனில் அல்ல, மொத்த வஹீயிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தும் தனது உளரலை இது வரை ஏன் தூக்கி வீசவில்லை?

ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் வந்திருந்தாலும்இ அது குர்ஆனுக்கு முரண்பட்டால் ஏற்கக் கூடாது என்பதில் உறுதியைக் காட்டும் இவர் குர்ஆனுக்கு முரண்பட்ட தனது கூற்றை இது வரை தூக்கியெறியாதுள்ளாரே! ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் வந்துள்ள ஹதீஸை விட ‘ஷைத்தான் தூண்டியதால் மலக்குகள் ஆட்சேபனை செய்திருக்கக் கூடும்’ என்ற இவரது உளரல் உயர்வாகி விட்டதா? ஹதீஸை விட மார்க்கத்திற்கு முரணான இவரது சுய விளக்கமும் முக்கியத்துவம் பெற்றவிட்டதா?

இது வரை நாம் கூறியதிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்கும்இ வஹீக்கும் சம்பந்தமில்லை. அதனால் வஹீ பாதிக்கப்பட்டிருக்குமே! என்ற சந்தேகத்திற்கே இடமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம். அத்துடன் பிஜேயின் வாதங்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் மட்டுமன்றி அவரது சொந்த விளக்கங்களுக்கே முரணாக அமைந்துள்ளது என்பதையும் அறிந்துகொண்டோம். அடுத்த இதழில் ‘எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?’ என்ற அடிப்படையில் அமைந்த அவரது வாதத்திற்குரிய தெளிவான பதிலை எதிர்பாருங்கள்.

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 03)

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி on Tuesday, April 14th, 2009

அன்பின் நண்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

சூனியம் என்றால் வெறும் தந்திர வித்தைதான் என்ற கருத்துத் தவறானது என்பது குறித்தும், ‘(நபியே) மனிதர்களிலிருந்து உம்மை அல்லாஹ் பாதுகாப்பான்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகச் கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்ற வாதம் போலியானது என்பது குறித்தும் இந்தொடரில் ஆராயப்படுகின்றது.

கடந்த இரு தொடர்களில்…

குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற ஆய்வாளர் PJ-யின் நிலைப்பாடு, முன்னர் சூனியம் இருக்கிறது, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை சரிகண்டேன். எனினும், மறு ஆய்வில் அது தவறு என்பதைப் புரிந்துகொண்டேன் என்ற விபரம் சொல்லப்படவேண்டும்.’ ஆனால், அப்படி எதையுமே சொல்லாமல் பில்லி-சூனியம் என்ற இரு புத்தகங்களும் ஒன்றுக்கு ஒன்று நேர்-முரணான கருத்தைத் தருகின்றன. இது நியாயம்தானா? மார்க்கத்தைத் தெளிவாகவும், துணிவாகவும், ஒழிவு-மறைவின்றியும் சொல்கிறார் என்பதற்காகத்தானே இவர் மீது பாசம் வைத்தோம்ள, அவரை நேசித்தோம். இவர் மீதுள்ள பாசத்தால் பலரைக் கோபித்தோம்.

நோன்பு துறக்கும் போது “தஹபல்லமஉ” துஆ ஓதவேண்டும் என ஆரம்பத்தில் கூறினோம். பின்னர், அந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெரிந்ததும் நாம் முன்னர் கூறியது தவறு என்று PJ பகிரங்கமாக அறிவித்தது போன்று சூனியம் பற்றி அறிவிக்காமல் ஏன் மாற்றம் மட்டும் கொண்டுவரப்பட்டது!

PJ-இன் இரண்டாவது சூனிய நூல், PJ அவர்களின் அல்குர்ஆன் தர்ஜமா விளக்கக் குறிப்பு இல-357 இன் மறுவடிவமாகும். தற்போது நாம் கையில் வைத்திருக்கும் நூல் 2005 ஆகஸ்டில் வெளியான மூன்றாவது பதிப்பாகும். தர்ஜமா குறிப்புடன் சில பின்னிணைப்புக்களைச் சேர்த்துள்ளார். (அந்த இணைப்பில் பல அகீதா ரீதியான தவறுகள் இருக்கின்றன. இந்த மறுப்பின் இறுதியில் அது பற்றியும் இன்ஷா அல்லாஹ்-விபரிக்கப்படும்.)

இந்த நூலில் PJ அவர்கள் 51:52, 7:107-109, 10:75-77, 26:31-35, 28:36, 51:38-39, 27:12-14, 40:24, 5:110, 61:6, 6:7, 10:2, 21:3, 28:48, 34:43, 37:14-15, 38:4, 43:30, 46:7, 54:2, 7:116, 20:66, 20:69 ஆகிய வசனங்களின் மொழிபெயர்ப்புக்களைப் போட்டுக்கொண்டு வருகிறார். இது PJ அவர்களின் வழமையான எழுத்து-நடைக்கு மாற்றமான முறையாகும். அவர் ஒரு வசனம் எழுதினால் இரண்டு பக்கங்களாவது விளக்கம் எழுதுவார். ஆனால், இங்கு வசனங்களாகவே எழுதிக்கொண்டு வருகின்றார்.

நிறைய வசனங்களை வைத்துத்தான் PJ இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் ஒரு தந்திரமாகவே இதைக் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வளவு வசனங்கள் மூலமும் அவர் வைக்கும் ஒரே வாதம்: நபிமார்கள் செய்த அற்புதங்களை, சூனியம் என்று மக்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து சூனியம் என்றால் தந்திரத்தின் மூலம், வித்தையின் மூலம் மக்களை ஏமாற்றுவது என்பதுதான் அர்த்தம் என்பது உறுதியாகின்றது என்பதேயாகும்.

மக்கள் நபிமார்களின் அற்புதங்களை மட்டும் சூனியம் என்று கூறவில்லை. அவர்கள் கொண்டுவந்த வேதத்தையும் கூட சூனியம் என்றுதான் கூறினர்.

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது ”மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? ”இரண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் சூனியங்களே” என்று கூறுகின்றனர். ”அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்” எனவும் கூறுகின்றனர். (28:48)

அவர்களிடம் உண்மை வந்த போது ”இது சூனியம். இதை நாங்கள் மறுப்பவர்கள்” எனக் கூறினர். (43:30)

இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர், ”இது தெளிவான சூனியம்” என்று கூறுகின்றனர். (46:7)

எனவே, அற்புதம் அல்லாத விடயங்களையும் அவர்கள் சூனியம் என்று கூறியதிலிருந்து “சூனியம் என்றால் தந்திர வித்தை என்று மக்கள் விளங்கியிருந்தார்கள்” என்ற PJ-யின் வாதம் வலிமையற்றுப் போகின்றது. இதற்கு மற்றுமொரு சான்றையும் கூறலாம்.

”மர்யமின் மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீதும் உள்ள எனது அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக! (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குத்ஸைக் கொண்டு உம்மை நான் வலுவூட்டியபோது. தொட்டில் பருவத்திலும் வாலிபப் பருவத்திலும் நீர் மனிதர்களுடன் பேசியதையும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் உமக்கு நான் கற்றுத் தந்ததையும் (எண்ணிப்பார்ப்பீராக.) களிமண்ணால் ஒரு பறவையின் தோற்றத்தைப் போல் என் அனுமதிப்படி நீர் உருவாக்கி, பின்னர் அதில் நீர் ஊதினீர். அப்போது, அது எனது உத்தரவுப் பிரகாரம் (உயிர் உள்ள) பறவையாக மாறியதையும், எனது உத்தரவுப் பிரகாரம் பிறவிக் குருடனையும் குஷ்டரோகியையும் நீர் குணப்படுத்தியதையும், என் உத்தரவுப் பிரகாரம் இறந்தோரை (மண்ணறைகளிலிருந்து உயிருடன்) நீர் வெளிப்படுத்தியதையும் (எண்ணிப்பார்ப்பீராக). தெளிவான சான்றுகளை நீர் அவர்களிடம் கொண்டுவந்த நேரத்தில், அவர்களில் நிராகரித்தோர், ‘இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை’ என்று கூறியபோது, உம்மை விட்டும் இஸ்ராஈலின் சந்ததியினரை நான் தடுத்ததையும் (எண்ணிப் பார்ப்பீராக!) என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!) (5:110)

இங்கே பிறவிக் குருடனையும், வெண்குஷ்டவாளிகளையும் ஈஸா(அலை) அவர்கள் குணப்படுத்துகின்றார்கள். அதைப் பார்த்த மக்கள் இது சூனியம் என்று கூறுகின்றனர். அவர்கள் இதை Magic என்றோ, வித்தை என்றோ கருதி கூறியிருக்க முடியுமா? கண் முன்னால் பார்வையிழந்தவன் பார்க்கிறான், தீர்க்க முடியாத வியாதி எனக் கருதப்பட்ட குஷ்டரோகம் குணம் பெறுகின்றது. இது எப்படி வித்தையாகும்? சூனியத்தை வித்தை என்று அவர்களோ குர்ஆனோ, ஹதீஸோ இஸ்லாமிய உலகமோ கூறவில்லை. அவர்கள் சூனியம் என்பது தீய சக்திகளின் உதவியால் செய்யப்படும் அறிவுக்குப் புலப்படாத ஒரு கலை என்றுதான் புரிந்திருந்தனர். இந்த அடிப்படையில்தான் நபிமார்கள் செய்த அற்புதங்கள், அவர்கள் கொண்டுவந்த வேதம் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல ஷைத்தானிடமிருந்து இவர்கள் பெற்றது. இவர்கள் ஷைத்தானிய சக்தி மூலம் தம்மை இறைத்தூதர்கள் என சாதிக்க முற்படுகின்றனர் என்ற கருத்தில்தான் நபிமார்கள், ரசூல்மார்கள் கொண்டுவந்த வேதமும் சூனியம் என்று விமர்சிக்கப்பட்டது.

இதனைப் பின்வரும் வசனமும் ஹதீஸும் உறுதி செய்கின்றன.

(குர்ஆனாகிய) இதைக்கொண்டு ஷைத்தான்கள் இறங்கவில்லை. அது அவர்களுக்குத் தகுதியுடையதுமன்று, அதற்கு அவர்கள் சக்திபெறவும் மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் (இதை ஒட்டுக்) கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர். (26:210-212)

நபி(ஸல்) அவர்கள் சுகயீனமுற்று ஓர் இரவு அல்லது இரண்டு இரவுகள் நின்று வணங்காதிருந்த போது ஒரு பெண் நபியவர்களிடம், ‘முஹம்மதே! உமது ஷைத்தான் உம்மைக் கை விட்டு விட்டான் எனக் கருதுகிறேன்.’ எனக் கூறினாள். அப்போதுதான் “உமது இரட்சகன் உம்மைக் கை விடவில்லை” எனக் கூறும் 93 ஆம் அத்தியாயம் அருளப்பட்டது. (புகாரி-4983)

குர்ஆனைக் கூட நபி(ஸல்) அவர்கள் ஷைத்தானிடமிருந்து பெற்று அறிவிப்பதாகவே காபிர்கள் எண்ணியுள்ளனர். இந்த அடிப்படையில்தான் வேதங்களையும் சூனியம் என்றனர் என்பதை இதன்மூலம் அறியலாம்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம்

லஃபீத் இப்னுல் அஃஸம் என்ற பனூ ஸுரைக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்தான். ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நபி(ஸல்) அவர்களுக்கு மாயத் தோற்றம் இதனால் ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஒரு இரவு அவர்கள் என்னிடம் இருக்கும் போது பிரார்த்திக் கொண்டே இருந்தார்கள். பின்னர்,’ஆயிஷாவே! நான் தீர்வு கேட்டுக்கொண்டிருந்த விடயத்தில் அல்லாஹ் எனக்குத் தீர்வு சொல்லி விட்டான். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்து ஒருவர் என் தலையருகிலும், மற்றவர் என் காலுக்கு அருகிலும் அமர்ந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘இவருக்கு என்ன?’ என்று கேட்க, மற்றவர் ‘இவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார். ‘யார் செய்தது?’ எனக் கேட்ட போது, ‘லபீதிப்னுல் அஃஸம்’ எனக் கூறினார். ‘எதில் சூனியம் செய்யப்பட்டுள்ளது?’ எனக் கேட்ட போது ஆண் ஈத்தமரப் பாளையிலே சீப்பு, முடி என்பவற்றில்’ என மற்றவர் பதில் கூறினார். ‘எங்கே?’ எனக் கேட்ட போது, ‘தஃலான் கோத்திரக் கிணற்றில்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்கள் சிலருடன் அங்கே வந்தார்கள்.

பின்னர், (என்னிடம்) வந்த போது ‘ஆயிஷாவே! அந்தக் கிணற்றின் நீர் மருதோண்டி கலந்தது போன்று அல்லது அந்தக் கிணற்றருகில் இருந்த ஈத்த மரங்களின் கிளைகள் ஷைத்தானின் தலைபோன்று இருந்தது’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அதை நீங்கள் வெளிப்படுத்திருக்கக் கூடாதா?’ என நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘அல்லாஹ் எனக்கு சுகமளித்துவிட்டான். இதன் மூலம் மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் வெறுத்தேன்’ எனக் கூறினார்கள். அந்தக் கிணற்றை மூடி விடுமாறு ஏவினார்கள் அது மூடப்பட்டது’ என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(குறிப்பு:- நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஏனைய நபிமொழிகள் அனைத்தையும் “ஹதீஸ்களுக்கிடையே முரண்பாடு இருக்கின்றது” என்ற PJ-யின் வாதத்திற்கு மறுப்புக் கூறும் போது தரப்படும்.) இந்த ஹதீஸை மறுக்கப் பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களுக்குரிய தெளிவான விளக்கங்களைத் தொடராக நோக்குவோம்.

பாதுகாக்கப்பட்ட நபி:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது.

தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே? அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? என்ற அடிப்படையில் வாதம் செய்கின்றனர்.

PJ அவர்களது தர்ஜுமா முதலாம் பதிப்பில் 357 ஆம் குறிப்பில் இந்த வசனத்தை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வசனம்தான் சூனிய ஹதீஸை மறுப்பதற்கு வலுவான வாதமாக முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் எங்கே முரண்படுகின்றது?

இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம்! அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்றுதானே இந்த ஹதீஸ் கூறுகின்றது? இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே! என்று கூறி விடலாம்.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் தாக்கப்படவில்லையா? அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா?

கைபரில் யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். பின்னர், விஷம் கலக்கப்பட்ட செய்தி வஹீ மூலம் கிடைத்தது. அல்லாஹ் அவர்களைக் காத்தான்.

நபியவர்கள் தனது மரண வேளையில்,
நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (புகாரி) என்றார்களே! அப்படியாயின் இந்த ஹதீஸ் 5:67 வசனத்திற்கு முரண்படுகின்றதா?

உண்மையில் 5:67 வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்;ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள்.

கொல்ல முடியாது என்பதுதான் 5:67 வசனத்தின் கருத்து என நாம் கூறவில்லை. அந்த வசனத்தின் அர்த்தமும் அதுதான். அந்த வசனம் குறித்த பின்வரும் PJ அவர்களின் விளக்கத்தைப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.

யாராலும் கொல்ல முடியாத தலைவர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

போர்க் களங்களிலும் பங்கெடுத்து கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. ‘உம்மை இறைவன் காப்பான்’ என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (திருக்குர்ஆன் 5:67)

இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.

இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம்.

என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.

அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.’

இது ஆய்வாளர் PJ அவர்களின் தர்ஜுமா விளக்கக் குறிப்பின் 145 ஆவது இலக்கத்தில் இடம்பெறும் விளக்கமாகும். இந்த விளக்கத்தில் எத்தனை இடங்களில் கொல்ல முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது?

ஆய்வாளர் PJ அவர்கள் 5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

இப்போது சூனியத்தை மறுப்பதற்கு இவர் வைக்கும் ஆயத்துக்களின் உண்மையான அர்த்தம், வாதங்களில் கூட இது ஐயத்தை ஏற்படுத்துகின்றதல்லவா?

சத்தியத்தைத் தேடும் எண்ணத்துடன் நடுநிலையோடு சிந்தித்தால் சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை என்ற தனது தவறான வாதத்தை வலுவூட்ட அவர் கையாளும் வசனங்களும் இதே அடிப்படையில்தான் தவறாகக் கையாளப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

அடுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற ஹதீஸ் குர்ஆனிலேயே சந்தேகத்தை உண்டுபண்ணுமா? என்பது குறித்து விரிவாக நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்!