Wednesday, September 30, 2009

இறையச்சமே இலக்கு..

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’ (2:183).

நோன்பு இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் ஒன்றாகும். இது இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி முன்னுள்ள சமூகங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் பிரசாரப் பணியைப் புரிவதற்கு முன்னரே, ஜாஹிலிய்யாக் கால மக்கள் நோன்பை அறிந்திருந்தனர். முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்றும் வந்தனர்.

‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’ என்று இந்த வசனம் கூறுகின்றது.

இங்கே ‘உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று’ என்பது, இதே அமைப்பில் கடமையானதைக் குறிப்பதாக இருக்காது. அவர்களுக்கும் கடமையாக இருந்தது; உங்களுக்கும் கடமை என்ற கருத்தைத் தான் தரும். ஏனெனில், இதற்கு முன்னர் ‘மௌன விரதம்’ மேற்கொள்ளும் பழக்கமும் முன்னைய சமூகங்களிடம் இருந்தது என்பதை,

‘ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், ‘மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலினால் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேசமாட்டேன்’ என்று கூறும்.(19:26) என்ற வசனம் உணர்த்துகின்றது.

இவ்வாறே, நோன்பு நோற்பவர்கள் ‘ஸஹர்’ உணவு உண்பது அவசியமாகும். ஆனால், அவர்களுக்கு ‘ஸஹர்’ விதிக்கப் பட்டிருக்கவில்லை. இதை ‘நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள்; ஏனெனில், ஸஹர் உணவு உண்பது எமக்கும் யூதர்களுக்கு மிடையில் உள்ள வேறுபாடாகும்’ என ஹதீஸ் கூறுகின்றது.

எனவே, எமக்குக் கடமையாக்கப்பட்ட அதே அமைப்பில் அவர்களுக்குக் கடமையாக் கப்பட்டிருக்கவில்லை என்பது புரிகிறது! எனவே, கடமை என்ற அம்சத்தில் அவர்கள் போன்றே உங்கள் மீதும் கடமை. ஆனால், அதை நிறை வேற்றும் ‘ஷரீஅத்’ வழிமுறை மாறுபட்டதாக இருக்கலாம் என்பதை இவ்வசனம் உணர்த்து கின்றது.

நோன்பு விதியாக்கப்பட்டதன் அடிப் படை இலக்குப் பற்றி இவ்வசனம் குறிப்பிடும் போது, ‘நீங்கள் பயபக்திடையுவர்களாகலாம்’ எனக் குறிப்பிடுகின்றது.

நோன்பு நோற்பவர்களிடம் ‘தக்வா’ என்ற இறையச்ச உணர்வு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும் என இவ்வசனம் கூறுகின்றது!

‘தக்வா’ என்றால் அல்லாஹ்வின் ஏவல்களை முடிந்தவரை எடுத்து நடத்தல், அவன் விலக்கியவற்றைவிட்டும் முற்றுமுழுதாக விலகிக்கொள்ளுதல் என்ற பக்குவத்தைக் குறிக்கும். இந்தப் பக்குவத்திற்கும் நோன்புக்கு மிடையில் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நோன்பு என்பது உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றை ‘சுபஹ்’ முதல் ‘மஃரிப்’ வரை அல்லாஹ்வுக்காக தவிர்ந்திருப்பதைக் குறிக்கும். இந்த செயல்பாடுகள் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவைகளே! அதேவேளை, மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானவையும் கூட! அல்லாஹ்வுக்காக குறிப்பிட்ட நேரம் இவற்றைத் தவிர்த்துக்கொள்பவன், அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகிக்கொள் ளும் பக்குவத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமல்லவா?

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவு செய்வதற்காக சுமார் 14 மணி நேரங்கள் உண்ணாமல், பருகாமல் சிரமத்தைத் தாங்கிக் கொள்கின்றான்! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதற்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை இதன் மூலம் பெறலாமல்லவா?

நோன்பு நோற்பவர் தனித்திருந்தாலும், பகிரங்கமாக இருந்தாலும், பசியும் தாகமும் வாட்டினாலும் இரகசியமாகக் கூட எதையும் உண்பதில்லை. ‘அல்லாஹ் பார்த்துக்கொண்டி ருக்கின்றான்’ என்ற உணர்வுதான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். இந்த உணர்வு அதிகரித்தால் அவன் தவறுகளிலிருந்து விலகி வாழும் பக்குவத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமல்லவா?

நோன்பாளி ‘ஸஹர்’ நேரத்தில் எழுந்து உண்கிறான். இது அவனது பழக்கவழக்கங்க ளுக்கும், உலக நடைமுறைக்கும் முரண்பட்ட நடவடிக்கையாகும். அதே வேளை, மக்கள் அனைவரும் உண்ணும் நேரத்தில் உணவைத் தவிர்த்து நடக்கின்றான். இது வித்தியாசமான நடைமுறையாகும். இப்படி பயிற்சி பெறும் ஒரு நோன்பாளி அல்லாஹ்வின் கட்டளை தனக்குச் சிரமமாக இருந்தாலும், தனது பழக்கவழக்கங்கள், நடைமுறைகளுக்கு முரண்பட்டதாக இருந் தாலும் நான் அதைச் செய்வேன்! அதற்காக சிரமமெடுப்பேன்! என்ற பக்குவத்தை வழங்குமல்லவா?

இது தான் நோன்பின் இலக்காகும். நோன்பாளி உண்ணல், பருகல், உடல் உறவில் ஈடுபடல் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்வதுதான் அடிப்படைக் கடமையாகும். ஆனால், இவற்றைத் தவிர்ப்பதுடன் கெட்ட நடத்தைகள், தேவையற்ற செயற்பாடுகள் என்பவற்றையும் அவன் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது தான் உண்மையான நோன்பு என்பதை பல்வேறு ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

‘எவர் பொய் பேசுவதையும், அதனடிப்படை யில் செயற்படுவதையும் விட்டுவிடவில் லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ் வுக்கு எந்தத் தேவையுமில்லை’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) ,ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

இந்நபிமொழி வெறுமனே பசித்திருப் பதும், தாகித்திருப்பதும் நோன்பின் இலக்கு அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

‘நோன்பாளி தேவையற்ற பேச்சுக்கள், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்ந்திருக்க வேண்டும். எத்தனையோ நோன்பாளிகளுக்கு அவர்களது நோன்பால் பசித்திருந்ததைத் தவிர எந்தப் பயனும் இருக்காது. எத்தனையோ தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை மூலம் கண் விழித்திருந்ததைத் தவிர வேறு பலன் கிடைக்காது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ,ஆதாரம் : இப்னுமாஜா, அஹ்மத்.

எனவே, பக்குவமற்ற விதத்தில் நோன்பு நோற்பவர்கள் வெறுமனே பசித்திருப்பவர்களே என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

‘நோன்பாளி பிற மனிதர்களுடன் பண்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால், அவர் வீண் பேச்சுக்களையும், கெட்ட நடத்தைகளையும் தவிர்ந்துகொள்ளட்டும். எவரேனும் அவருடன் சண்டைசெய்ய முற்பட்டால், ‘நான் நோன்பாளி’ எனக்கூறி, (பொறுமை காத்து)க்கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே, எம்மிடம் பயபக்தியை ஏற்படுத் தும் வண்ணம் நோன்பை நோற்று வீணான நடத்தைகள், சர்ச்சைகளைத் தவிர்த்து உரிய முறையில் கடைபிடித்து உயரிய இறையச்சத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிப்போமாக!

உண்மை உதயம் மாதஇதழ் (2007)

மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்

எழுதியவர்:மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ( On 29 July 2009)

பேருவலை – மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது.

பேருவளை, தர்கா டவ்ன் பகுதிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வீடுகளிலும், பொதுப் பள்ளிகளிலும் பல ஏச்சுப் பேச்சுகள், எதிர்ப்புக்கள், கல்லெறிகளுக்கு மத்தியில் தொடரப்பட்ட பிரச்சாரம், “உண்மை உதயம்” ஆசிரியரும், சகோதரர் தவ்பீக் மதனி அவர்களும் கடத்தப்பட்டுக் கர்ண கொடூரமாகத் தாக்கப்பட்டதன் பின்னர் புது வடிவம் பெற்றது. எமக்கெனத் தனிப் பள்ளிவாசல்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் பின்னர் தர்கா நகரில் தனிப் பள்ளிவாசல் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யாவினால் தனியான ஜும்ஆப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.

இவ்வாறே, பேருவளை சீனன் கோட்டை, மஹகொட பகுதிகளிலும் தனி நபர் வீடுகளில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சைனா போர்ட்டில் பிரச்சினைகள் எதுவும் இன்றி ஏகத்துவம் வளர்ந்து, ரியாளுஸ் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளியாக மலர்ந்துள்ளது.

மஹகொட பிரதேசத்தில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. நவாஸ் ஹாஜியார் இல்லத்திலும் மற்றும் பலரின் வீடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம், தகரத்தால் அமைக்கப்பட்ட தற்காலிகப் பள்ளியில் முன்னெடுக்கப்பட்டது.

ஒரு நாள் அதிகாலை ஸுபஹ் தொழுதுகொண்டிருக்கும் போது தொழுகையாளிகளைக் கொலை செய்யும் நோக்கில் கை குண்டு வீசப்பட்டு அல்லாஹ்வின் அருளால் அந்த குண்டு வெடிக்காததினால் ஏகத்துவச் சகோதரர்கள் உயிர் தப்பினர்.

படுகொலை முயற்சி நடந்த அதே இடத்தில், ஜம்இய்யத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியாவினால் “மஸ்ஜிதுர் ரஹ்மான்” என்ற பெயரில் இரு மாடி கொண்ட பிரமாண்டமான மஸ்ஜிதும், அதை ஒட்டி இரு மாடி மத்ரஸாவும், வாசக சாலையும், அத்துடன் சிறிய வைத்திய நிலையம் ஒன்றும் 2002 இல் கிட்டத்தட்ட 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, அமைதியான முறையில் அந்த மஸ்ஜித் சென்ற வெள்ளி வரை இயங்கி வந்தது.

23-07-09 அன்று அங்கு குத்பா உரை நிகழ்த்தியவர் கந்தூரிக்கு எதிராகப் பேசியுள்ளார். புகாரிப் பள்ளியில் இஸ்லாத்தில் குறிப்பிடப்படாத கந்தூரி செய்ய முடியுமாக இருந்தால், ஏகத்துவப் பள்ளியில் கந்தூரிக்கெதிரான இஸ்லாமிய நிலைப்பாட்டைப் பேசப் பூரண உரிமை உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை, மாற்றுத் தரப்பினர் தமது உரைகளில் ஏகத்துவவாதிகளைக் கேவலமாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் பின்னர் சிலர் வெள்ளி மாலை மஸ்ஜிதுக்குக் கல்லெறிந்துள்ளனர். பின்னர் வந்த ஒரு குழு கல்லெறிந்த மஸ்ஜிதைச் சேதப்படுத்தியது மட்டுமன்றி ஒருவரைக் கத்தியாலும் குத்தியுள்ளனர்.

பின்னர் திட்டமிட்டு அரசியல் பின்னணியுடன் காலியிலிருந்து காடையர்களை வரவழைத்துப் பெரும் திரளாகப் பள்ளியைச் சூழ்ந்து பள்ளியைத் தாக்கியுள்ளனர்.

அப்போது பள்ளியில் இருந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட சகோதரர்களின் மோட்டார் சைக்கிள்கள், புஷ் சைக்கிள்களை ஒன்றாகச் சேர்த்து எரித்துப் பள்ளியைப் பற்ற வைத்துள்ளனர். பள்ளியின் அனைத்துக் கண்ணாடிகளையும் உடைத்துக் காட்டு தர்பார் நடத்தியுள்ளனர்.

அங்கிருந்த சகோதரர்களைக் கதறக் கதறக் கருவறுத்துள்ளனர். வுழூச் செய்யுமிடத்தில் 6 இடங்களில் மாடு அறுத்தது போல் காட்சியளிக்கும் இரத்த வெள்ளம், கலகக்காரர்களிடம் கடுகளவு கூட இஸ்லாமிய உணர்வோ, ஈவு இரக்கமோ இல்லை என்பதற்கான இரத்த சாட்சியங்களாகத் திகழ்கின்றன.

அத்துடன் மத்ரஸாவும், அதனுடனிருந்த அறபு இஸ்லாமிய வாசிகசாலையும் எரிக்கப்பட்டுள்ளது. அறபுக் கிதாபுகள், குர்ஆன் பிரதிகள் எதுவும் இதயமற்றவர்களின் கண்களுக்குப்படவில்லை.

அத்துடன் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வந்த மருத்துவ நிலையம் தகர்த்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களினதும் அனைத்துக் கட்டமைப்புக்களும் கச்சிதமாகத் தகர்க்கப்பட்டுள்ளன.

காட்டு மிராண்டிகளின் காட்டு தர்பாரில் இருவர் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 13 பேர் பாரிய வால், கத்தி வெட்டுக் காயங்களுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வளவு அநியாயங்களும் சில மணி நேரங்களில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் கண்ணை மூடிக்கொண்டிருந்துள்ளது. பல முனைகளில் முயற்சி செய்யப்பட்டும் அவர்கள் அசையவில்லை.

கடமை தவறிய காவல் துறையும், அவர்களின் கரங்களைக் கட்டிப் போட்ட அரசியல் அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாகும்.

இந்த அநியாயத்தைச் செய்தவர்கள், தூண்டி விட்டவர்கள், துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளே! தண்டிக்கப்படவேண்டியவர்களே! அவர்களுக்கு இந்த உலகத்திலேயே உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க எமது சகோதரர்களும், மனித நேயம் மிக்க நடுநிலை மக்களும் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர்.

இரண்டு உயிர்களுக்காக என்றில்லாவிட்டால் கூட, அல்லாஹ்வின் கலாம் குர்ஆனைத் தீயிலிட்டு அல்லாஹ்வை ஸுஜூது செய்த மாளிகையைக் கேவலப்படுத்திக் காஃபிர்களை விட மோசமாக நடந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காகவாவது நடுநிலை சகோதரர்களும், இது வரை கந்தூரிக்கு ஆதரவளித்து வந்தவர்களும் தங்கள் நிலை பற்றிச் சிந்தித்து இந்த அநியாயத்திற்கு எதிராக அணி திரளக் கடமைப்பட்டுள்ளனர்.

இதே வேளை,
அந்த இரண்டு உயிர்கள்!
சிந்தப்பட்ட இரத்தங்கள்!
எதுவும் அல்லாஹ்வின் முன் வீண் போகாது!

இவர்களின் பண-பலமும், அரசியல் அதிகாரமும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் முன் அடிமைப்படும் நாள்வரும். இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் பின்னால் நின்றவர்களை நிச்சயம் அல்லாஹ் தண்டிப்பான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்குள்ளது. எனவே, அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் இறுதி வெற்றி எமக்குக் கிடைக்கும் என்ற அடிப்படையில் நாம் நிம்மதி பெறுவோம். அதே வேளை, இந்த உலகத்தில் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவும் பாடுபடுவோம்!

அந்த விதவைப் பெண்களின் கண்ணீரும், அனாதைகளாக்கப்பட்ட அரும்புகளின் ஏக்கமும் நிச்சயமாக இவர்களை ஒரு நாள் எரித்துப் போடும். அங்கு தொழுகைக்காகக் கூடிய ஆயிரக் கணக்கான மக்களின் அழுகையும், சாபமும் இவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் அல்லாஹ்வை நம்பிய எமக்கு நம்பிக்கையுண்டு!

இவ்வேளையில் பாரபட்சமாக நடந்த பேருவலைப் பொலிஸ் அதிகாரிகளையும், அநியாயத்திற்குத் துணை நின்ற ஆன்மிக(?)-அரசியல் தலைமைகளையும், செய்தி ஊடகங்களில் பிழையான தகவல்களைப் பரப்பிய (சன்டே டய்ம்ஸ் போன்ற) ஊடகங்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன் எமது சகோதரர்கள் பொறுமை காத்து நிதானமாகச் செயற்படவேண்டும். எதையும் சட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சிதைக்கப்பட்ட மஸ்ஜித் குறித்து ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்துக் காரியமாற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வை நல்ல படிப்பினையாக எடுத்து எமது தஃவாவை அமைதியாகவும், நிதானமாகவும் முன்னெடுக்க வேண்டும். எமது உரைகள் அடுத்தவர்களுக்கு உண்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர உள்ளங்களைக் காயப்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. சத்தியத்தைச் சொல்ல வேண்டும். அதை அழகிய வார்த்தைகளில் நிதானமான நிலையோடு சொல்ல வேண்டும் என்ற பாடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஓரிருவரின் அவசரப் புத்தியும், அனுபவமும் அமைதியும் அற்ற நிலையும் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்து விடும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

இன்ஷா அல்லாஹ்! இவர்களின் இந்த அக்கிரமம் பேருவலைப் பகுதியில் ஏகத்துவ எழுச்சிக்கும், கந்தூரியின் வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

‘அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்த முயல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அச்சமுடையவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்கு அவர்களுக்குத் தகுமானதல்ல. அவர்களுக்கு இம்மையில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.’ (2:114)

குறிப்பு:-
மஹகொட, தர்கா நகர், சைனா போர்ட் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று ஜும்ஆப் பள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு மஸ்ஜிதுகள் JASM இனால் கட்டப்பட்டதாகும். 1990 களின் இறுதிப் பகுதிகளில் இப்பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வரலாறுகளையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, TNTJ இணைய தளத்தில் இலங்கை வரலாற்றில் இது வரை காலமும் எந்த ஆலிமும் சொல்லாத அளவுக்கு அவர்களின் ஆலிம் சத்தியத்தை உடைத்துச் சொல்லியிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

50 வருடங்களாக இலங்கையில் நடக்கும் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தமது ஏகபோக உரிமையாக மாற்ற முற்பட்டுள்ளனர். இவ்வளவு தெளிவான விஷயத்திலேயே இப்படிப் பகிரங்கமாகப் பொய் சொல்பவர்கள் தனிப்பட்ட விவகாரங்களில் கூறும் செய்திகளை எவ்வாறு நம்ப முடியும்? அவர்கள் குறிப்பிட்ட ஆலிம் சத்தியத்தைச் சொன்னாலும் அதை முறைகேடாகக் கூறி இலங்கை வரலாற்றிலேயே இதுவரை ஏற்படாத ஒரு கறை படிந்த நிகழ்வுக்குக் காரணமாக அமைந்ததை இவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.

சத்தியத்தைச் சொன்னவர் துணிந்து கந்தூரி நடக்கும் இடத்துக்குச் சென்று கூறியிருந்தால் அவரின் துணிவைப் பாராட்டியிருக்கலாம். அல்லது பேசிவிட்டு பிரச்சினை நடக்கையில் களத்துக்குச் சென்றிருந்தால் பாராட்டியிருக்கலாம். தான் பேசிய பேச்சால் ஏற்பட்ட முறுகலால் கொலை செய்யப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் பார்க்கவோ, இறந்தவர்களின் ஜனாஸாவில் பங்கேற்கவோ, பொலிஸுக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவோ முடியாமல் ஓடி ஒழிந்தவர்தான் இலங்கை வரலாற்றில் இதுவரையும் யாரும் கூறாத அளவுக்கு சத்தியத்தைக் கூறியுள்ளாராம். TNTJ இலங்கையில் இரத்தம் சிந்தும் தஃவாக் களமொன்றை உருவாக்க முயற்சிக்கின்றது. இதற்கு இலங்கை மக்களே நீங்கள் இடமளிக்க விரும்புகிறீர்களா?

ஹதீஸ் விளக்கம் – கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

(அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள்,

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான்.

பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். ‘தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு “தவ்பா” (பாவமன்னிப்பு) உண்டா?’ என்றும் கேட்டான். “உண்டு, உனக்கும், தவ்பாவுக்குமிடையே தடையாக இருப்பவர் யார்? நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்” என்று கூறினார்.

அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், ‘தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்’ என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, ‘அவன் நன்மையை அறவே செய்ததில்லை’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள்.

அவர் கூறினார்; ‘அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!’ என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

இந்த நபிமொழி, ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உட்பட பல்வேறு ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் மூலம் பல நல்ல படிப்பினைகளை நாம் பெறமுடிகின்றது.

1) முதலாவதாக அல்லாஹ்வின் அன்பும் அருளும் விசாலமானது என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது! 100 கொலைகள் செய்தவன் கூட தனது பாவத்தை உணர்ந்து தௌபாச் செய்து பாவமன்னிப்புக் கோரினால் அந்த அளவற்ற அருளாளன் – நிகரற்ற அன்புடையவன் அதை அங்கீகரித்து கருணை காட்டக்கூடியவனாக இருக்கின்றான்.

2) தௌபாவின் சிறப்பை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

‘(நபியே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாக வேண்டுகின்றனர். குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் வேதனை அவர்களிடம் வந்திருக்கும். நிச்சயமாக அது அவர்கள் உணர்ந்துகொள்ளாத நிலையில் திடீரென அவர்களிடம் வரும்.’ (29:53)

இந்த வசனத்தில் பாவத்தில் வரம்பு மீறிச் சென்றவர்களைக் கூட, ‘என்னுடைய அடியார்களே! நீங்கள் என் ரஹ்மத்தில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நான் கொலை உட்பட அனைத்துத் தவறுகளையும் மன்னிக்கக்கூடியவன் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.

ஒரு ஹதீஸுல் குத்ஸியில்,

‘எனது அடியார்களே! நீங்கள் இரவு-பகலாக பாவம் செய்பவர்கள்தான். நானோ, அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கக்கூடியவன். என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களை மன்னிக்கின்றேன்’ என கூறுகின்றான்.
(முஸ்லிம்)

எனவே தௌபா என்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கக்கூடியது. ஷிர்க் உட்பட அனைத்துப் தவறுகளுக்கும் தௌபாவின் மூலம் மன்னிப்புப் பெறலாம். ஷிர்க்கைப் பொறுத்தவரையில் அதே நிலையில் மரணித்து விட்டால், மன்னிப்பே இல்லை. ஏனைய தவறுகளைப் பொறுத்தவரையில் உலகத்தில் மன்னிப்புக் கேட்டால் மன்னிப்புக் கிடைக்கும். மன்னிப்புக் கேட்காமல் மரணித்து விட்டால், அல்லாஹ் நாடினால் மன்னிப்பான்; நடினால் தண்டிப்பான். தண்டித்த பின் ஈமான் இருப்பதால், இணை வைக்காது வாழ்ந்ததால் என்றாவது ஒரு நாள் நரகத்திலிருந்து அவரை அல்லாஹ் வெளியேற்றுவான். எனவே, எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்புண்டு. செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டு அதன் பின்பு தவறு செய்யாது வாழவேண்டும்.

3) அறிவின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மார்க்க அறிவு அற்ற, வணக்க-வழிபாட்டில் அதிக ஆர்வம் கொண்டவரிடம் “பத்வா” கேட்ட போது, அவர் அறிவுடன் பதில் கூறாது உணர்ச்சி வசப்பட்டு ‘உனக்கு மன்னிப்பு இல்லை’ என்கிறார். இதனால், ஆத்திரமுற்ற அம்மனிதர் மீண்டும் அதே தவறைச் செய்யும் நிலைக்குள்ளானார்.

ஆனால், அறிஞரிடம் கேட்ட போது ‘மன்னிப்பு உண்டு’ என்று பதில் கூறியதுடன், நல்ல மனிதராகத் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டுகின்றார். இதன் மூலம் அறிவற்ற வணக்கவாளியை விட அறிஞனின் அந்தஸ்த்துத் தெளிவுபடுத்தப்படுகின்றது! எனவே, நாம் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்வது அவசியமாகும்.

4) அடுத்து, இந்த ஹதீஸ் பத்வா-மார்க்கத் தீர்ப்புக் கேட்கும் போது தகுதியானவரை அறிந்து கேட்க வேண்டும் எனக் கற்றுத் தருகின்றது. இபாதத்தில் ஈடுபடும் அனைவரும் மார்க்கத் தீர்ப்புக் கூறுவதற்குத் தகுதியானவர்களல்ல. எனவே, கற்றறிந்த ஆலிம்களிடம் மார்க்க விளக்கங்களை, தீர்ப்புக்களைப் பெற முயலவேண்டும். “ஆலிம்” என்ற போர்வையில் இருக்கக்கூடிய குர்ஆன்-ஸுன்னா பற்றிய ஆழமான அறிவு அற்றவர்களிடமோ அல்லது போலியான உருவமைப்பையும் வெளி அடையாளங்களையும் கொண்டு திகழ்பவர்களிடமோ மார்க்க பத்வாக்களைப் பெற்று நம்மை நாமே அழித்துக்கொள்ளாது ஆலிம்களிடம் மார்க்கத் தீர்வைப் பெறவேண்டும்.

5) தமக்கு ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த, சரியான விளக்கம் தெரியாத விஷயத்தில் எவரும் தீர்ப்புக் கூற முனையக்கூடாது என்பதையும் இந்த ஹதீஸ் மூலம் அறியலாம். முதலாவதாகப் பதில் கூறியவர் உணர்ச்சி வசப்பட்டுப் பதில் கூறியதால் அநியாயமாகக் கேள்வி கேட்டவர் மீண்டும் அதே தவறைச் செய்யும் நிலை தோன்றியுள்ளது!

6) இரண்டாவதாக, “பத்வா” கூறியவர் கேள்விக்குப் பதில் மட்டும் கூறாமல் ‘நீ இந்த ஊரில் இருக்காதே! அருகில் நல்ல ஊர் இருக்கின்றது. அங்கே போய் அந்த மக்களுடன் சேர்ந்து வாழ்’ என அவர் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டுகின்றார். மக்களுக்கு மார்க்கம் கூறுபவர்கள் வெறுமனே பதில் கூறுபவர்களாக மட்டும் இருக்காது, அந்தப் பதிலுக்கு ஏற்ப வாழ்வதற்கான வழியையும் காட்ட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

‘வட்டி எடுக்காதே’ என்று சொன்னால் மட்டும் போதாது, வட்டியை விட்டும் விலகி வாழ வழிகாட்ட வேண்டும். “பித்அத்” செய்யாதே என்று கூறினால் மட்டும் போதாது, அதற்குண்டான “ஸுன்னா”வையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை இந்த ஹதீஸ் மூலம் பெறமுடியும்.

7) அடுத்து, நல்ல சூழலில் வாழ்வதன் முக்கியத்துவத்தை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது! அந்த “ஆலிம்” திருந்தி வாழ விரும்பிய மனிதனுருக்கு அவன் இருக்கும் கெட்ட ஊரை விட்டும் விலகி, நல்ல மக்கள் வாழும் இடத்திற்குப் போகுமாறு கூறுகின்றார். எனவே, சூழல் மனிதனிடம் தாக்கம் செலுத்தும். இந்த வகையில் நாம் வாழும் சூழலை நல்ல சூழலாக மாற்றுவது அல்லது நல்ல சூழலுக்கு இடம்மாறுவது அவசியமாகும்.

குறிப்பாக, அநாச்சாரங்களும் ஒழுக்கச் சீர்கேடுகளும் மலிந்து போன இக்காலத்தில் நாமும் நமது குழந்தைகளும் கெட்டு விடாத நல்ல சூழலை நமது வாழ்விடமாக மாற்றிக்கொள்வது அவசியமாகும். நாம் “தக்வா”வுடையவர்களுடன் சேர்ந்தும் இருக்க வேண்டும். இந்த வகையில் நாம் வாழும் சூழல் குறித்துக் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

8) “கொலைக் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டு” என்பதையும் இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.

“கொலை” என்பது மிகக் கொடிய குற்றமாகும். அடுத்த மனிதனின் உரிமைகள் விடயத்தில் இழைக்கப்படும் கொடிய அத்துமீறலாகவும் அது திகழ்கின்றது. கொலைக்கு இஸ்லாம் மரண தண்டனையை விதித்துள்ளது. இருப்பினும் ‘கொலை செய்தவன் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டால் மன்னிப்புக் கிடைக்குமா? கிடைக்காதா?’ என்று கேட்டால், “கிடைக்கும்” என்ற கருத்தைத்தான் இஸ்லாம் கூறுகின்றது.

9) “ஒரு முஃமினை வேண்டுமென்றே கொன்றவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான்” என பின்வரும் வசனம் கூறுகின்றது.

‘நம்பிக்கையாளரான ஒருவரை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ, அவனுக்குரிய கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனைச் சபித்தும் விட்டான். அவனுக்கு மகத்தான வேதனையையும் அவன் தயார் செய்து வைத்துள்ளான்.’ (4:93)

இந்த வசனத்தை வைத்து கொலை செய்தவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஏனைய ஸஹாபாக்கள் மாற்றுக் கருத்தில் இருக்கின்றனர்.

“இபாதுர் ரஹ்மான்” எனும் அல்லாஹ்வின் அடியார்கள் பற்றி அல்குர்ஆன் கூறும் போது, ‘அவர்கள் இணை வைக்க மாட்டார்கள், கொலை செய்ய மாட்டார்கள், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இவற்றைச் செய்பவருக்குக் கடுமையான தண்டனை உண்டு’ என்று கூறுகின்றது. (பார்க்க 25:63-69)

இவற்றைச் செய்து விட்டு, முறையாக தௌபாச் செய்து நல்லவர்களாக மாறுபவர்களுக்கு மாவமன்னிப்பு மட்டுமன்றி அவர்கள் செய்த பாவங்களே நன்மைகளாக மாற்றப்படும் என அதற்கு அடுத்த வசனம் கூறுகின்றது.

‘எனினும், யார் பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு, நல்லறமும் புரிகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.’ (25:70)

இந்த வசனம் மிகத் தெளிவாகவே “கொலைகாரன் தௌபாச் செய்தால், மன்னிப்பு உண்டு” என்று கூறுகிறது!

அடுத்து, நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களிடம் “பைஅத்” வாங்கும் போது, “இணை வைக்கக்கூடாது, திருடக்கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது, கொலை செய்யக்கூடாது” என்றெல்லாம் கூறி விட்டு, “யார் இவற்றைச் செய்கிறாரோ, அவர் உலகில் தண்டிக்கப்படுவார். யார் இவற்றைச் செய்து அல்லாஹ் அதை மறைத்து விட்டானோ, அவனை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்|” என்று கூறினார்கள். (உப்பாததிப்னு ஸாமித் – புகாரி)

மேற்படி ஹதீஸும் “கொலை செய்தவனை அவன் தௌபாச் செய்யாமல் மரணித்திருந்தாலும், அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்” என மன்னிப்பு-தண்டிப்பு இரண்டையுமே அல்லாஹ்வின் நாட்டத்தில் விட்டுள்ளது. அல்லாஹ் யாரை மன்னிப்பான்? யாரைத் தண்டிப்பான்? என்பது அவனது அதிகாரத்திற்குட்பட்டது. அதில் யாரும் தலையிட முடியாது!

கொலைகாரனுக்கு மன்னிப்பே இல்லையென்றால் பல ஸஹாபாக்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்து விடுவர். ஹம்ஸாவைக் கொன்ற வஹ்ஷி. இவ்வாறே, முஸ்லிம்களுக்கு எதிராக போர்க் களங்களில் யுத்தம் செய்து விட்டுப் பின்னர் இஸ்லாத்தில் இணைந்த இக்ரிமா(ரலி), துமாமா(ரலி), காலித் பின் வலீத்(ரலி) போன்ற பலரும் மன்னிப்பு அற்றவர் பட்டியலில் சேர நேரிடும். எனவே, கொலை செய்தவன் மரணிப்பதற்கு முன்னரே தௌபாச் செய்தால் அவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால், இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருந்தால் இஸ்லாமிய சட்டப் பிரகாரம் அவர் குற்றவியல் சட்டப்படி கொல்லப்படுவார் அல்லது கொல்லப்பட்டவரின் குடும்பம் மன்னித்தால் மன்னிக்கப்படுவார்.

மரணித்த பின் அவர் தண்டிக்கப்பட்டால், நரகில் நீண்ட காலம் இருப்பார். ஆனால், “ஷிர்க்”குடன் மரணித்தவர் போன்று என்றென்றும் நரகிலேயே இருக்க மாட்டார். என்றாவது ஒரு நாள் அவர் நரகத்தை விட்டும் மீட்கப்பட்டுச் சுவனத்தில் நுழைவிக்கப்படுவார் என்பதே சரியான கருத்தாகும்.

“முஃதஸிலாக்கள்” எனும் வழிகெட்ட பிரிவினரும், “கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை, அவன் நீடித்து நிலையாக நரகத்தில் இருப்பான்” என்ற கருத்தில் இருக்கின்றனர்.

இக்கொள்கையைச் சார்ந்த ஒருவன்,
‘கொலைகாரன் நரகத்தில் நிலையாக இருப்பான் என்று நீ ஏன் கூறினாய்?’ என அல்லாஹ் மறுமையில் என்னிடம் கேட்டால், ‘யா அல்லாஹ்! நீதான் (4:93) இப்படிக் கூறினாயே! அதனால்தான் நான் அப்படிக் கூறினேன்’ எனப் பதில் கூறுவேன்’ என தன் வாதத்தை நியாயப்படுத்தி கூறினான்.

அப்போது அச்சபையில் இருந்த ஒரு சிறுவர் ‘இணை வைத்தலைத் தவிர ஏனைய பாவங்களை நான் நாடினால் மன்னிப்பேன் என்று கூறினேனே! கொலை என் நாட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று உனக்குக் கூறியது யார்? என்று அல்லாஹ் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்ட போது, அந்த வழிகேடன் வாயடைத்துப் போனான்.

எனவே, தௌபாச் செய்தால் கொலைக்கும் மன்னிப்பு உண்டு என்பதே சரியான கருத்தாகும். இதைத்தான் குர்ஆனும் கூறுகின்றது! அந்தக் குர்ஆனின் கூற்றை உறுதி செய்வதாக இந்த ஹதீஸும் அமைந்துள்ளது.

10) அடுத்து இந்த ஹதீஸ் கொலைகாரனுக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுவதன் மூலம் கொலைக் குற்றம் பெருகுவதைத் தடுக்கின்றது! “கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை” என்று கூறினால், ஒரு கொலை செய்தாலும் நரகம்-நரகம்தான். பத்துக் கொலை செய்தாலும் நரகம்தானே என்ற அடிப்படையில் செயற்பட ஆரம்பித்து விடுவான். “கொலைகாரனுக்கு மன்னிப்பு இல்லை” என்று கூறுவது கொலைக் குற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது. ‘மன்னிப்பு இல்லை’ என்று கூறியவனையே அவன் கொன்றுள்ளான்.

எனவே, கெட்டவனுக்கும் திருந்தி வாழ வழி விடவேண்டும். அல்லாஹ்வின் அன்பை விடக் கோபத்தை முதன்மைப்படுத்திப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானாலும் கொலையை எப்படி மன்னிப்பது என்பது கேள்வியாக இருக்கலாம். ஆனால், அல்லாஹ்வின் அன்பையும், விசாலமான அவனது மன்னிப்பையும் முதன்மைப்படுத்திப் பார்ப்பவர்களுக்கு கொலைகாரனுக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான் என்பது மறுப்பதற்குரிய ஒன்றாகத் திகழாது!

எனவே இந்த ஹதீஸ் கொலைக்கு மன்னிப்பு உண்டு எனக் கூறி, இன்னும் இன்னும் கொலை செய்! என்று தூண்டவில்லை. கொலை செய்தால் மன்னிப்பு உண்டு! திருந்தி வாழ்! என வழிகாட்டுகின்றது.

11) அடுத்தது, மார்க்க விடயங்களில் கேள்வி கேட்பது இன்று அதிகரித்துள்ளது! ஆனால், சொந்த வாழ்வில் அமல் செய்வதற்காகக் கேள்வி கேட்காமல் சும்மா கேட்பதற்காக அல்லது பரீட்சித்துப் பார்ப்பதற்காக, ‘என்ன சொல்றார் என்று பார்ப்போமே!’ என்ற எண்ணத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்வி கேட்பவர் தகுந்த பதில் கிடைத்தால், அதை அமல் செய்ய வேண்டும். இந்த மனிதர் அந்த ஆலிம் கூறியபடி தனது சொந்த ஊரை விட்டு விட்டு நல்ல ஊரை நோக்கி “ஹிஜ்ரத்” செய்ததாக இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே, அமல் செய்வதற்காக இஸ்லாத்தை அறிந்துகொள்ள முற்படவேண்டும்.

12) நல்ல விடயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.
‘உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள மன்னிப்பின் பக்கமும், வானங்கள் மற்றும் பூமியின் அளவு விசாலமான சுவர்க்கத்தின் பக்கமும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அது பயபக்தியாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.’ (3:133)

எனக் குர்ஆன் கூறுகின்றது. எனவே, நல்ல விடயங்களைத் தாமதப்படுத்தாது அவசரமாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் குறுக்கிட்டு நல்லதைச் செய்ய விடாமல் தடுத்து விடுவான். இந்த ஹதீஸ் அவர் நல்ல ஊரை நோக்கி ஒரு அடி அதிகமாகச் சென்றதால் இவர் நன்மையின் பக்கம் சற்று விரைவாகச் சென்றுள்ளார் என்ற அடிப்படையில் அவரது “ரூஹ்” ரஹ்மத்துடைய மலக்குகளால் எடுத்துச் செல்லப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது.

இவ்வாறு, பல்வேறுபட்ட நல்ல பாடங்களையும் படிப்பினைகளையும் இந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. இந்தப் பாடங்களைப் படிப்பினையாகக் கொண்டு செயற்பட முனைவோமாக!

நபித்தோழர்கள் பற்றிய நமது நிலைபாடு

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

www.islamkalvi.com/media/ismail_salafi7/index.htm

கருத்து வேறுபாடுகளும் நமது நிலையும்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இடம்: இலங்கை

www.islamkalvi.com/media/ismail_salafi6/index.htm

பெற்றோர்களின் கடமை

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இடம்: இலங்கை

www.islamkalvi.com/media/ismail_salafi5/index.htm

அழைப்புப்பணியின் அவசியம்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இடம்: ராயல் கமிஷன் கேம்ப்-2 நூலக வளாகம்

தேதி: 27-04-2008

www.islamkalvi.com/media/ismail_salafi3/index.htm

மார்க்கத்தின் பார்வையில் வளைகுடா பயணங்கள்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இடம்: அமியான்டிட் கேம்ப் பள்ளி வளாகம்

தேதி: 22-04-2008

www.islamkalvi.com/media/ismail_salafi4/index.htm

குழந்தை வளர்ப்பும் இஸ்லாமிய கல்வியும்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

http://worldmuslimmedia.com/islamiyadawa/ismail3/index.htm

கொள்கையில் உறுதி வேண்டும்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

http://worldmuslimmedia.com/islamiyadawa/ismail2/index.htm

ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா

நாள் : 18.04.2008

www.islamkalvi.com/media/ismail_salafi1/

Tuesday, September 29, 2009

ஷிர்க்கும் தக்லீதும்

உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இடம்: ராயல் கமிஷன் கேம்ப்-14 பள்ளி வளாகம்

தேதி: 26-04-2008

www.islamkalvi.com/media/ismail_salafi2/index.htm